சனி, 6 நவம்பர், 2010

கவியரசு கண்ணதாசனின் ஆறு கட்டளைகள்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் – வெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்!
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!

இதில் – மிருகம் என்பது கள்ளமனம்
உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்
இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!

எலுமிச்சை

சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான்.
முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.
உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
எலுமிச்சையின் பயன்கள்
வயிறு பொருமலுக்கு
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க
தற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
இரத்தக் கட்டுக்கு
உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க
சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.
நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
· எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
· உடல் நமைச்சலைப் போக்கும்
·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.
எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்
டாக்டர் ரொசாறியோ ஜோர்ஜ்

உலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய், நார்த்தங்காய், தேசிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், பூண்டு போன்றவையும் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்புகளாக நமது அன்றாட சமையலில் சேர்க்கக் கூடிய உணவு வகைகளாகும்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைக்காலம் முழுவதும் தரக்கூடியது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய், இருவகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாகச் சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும்.

அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தைக் குறைத்து மூளைக்குக் குளிர்ச்சியும் ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியதாகும். கோடைக்காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் நல்ல மருந்தாகும். எனவே நெல்லிக்காயை எந்த விதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

சிறுவயதில் நெல்லிக்காய் பறிக்கத் தோப்புக்குச் செல்வதும், பாடசாலைகளின் வெளியே விற்கப்படும் தின்பண்டக் கடைகளில் கமர்கட், கச்சான், பஞ்சுமிட்டாய், மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், முந்திரிப்பழம் மற்றும் அரி நெல்லிக்காய், பொறி கடலை ஆகியவற்றை இளம் சிறார்கள் ஆவலுடன் வாங்கி உண்டு மகிழ்வது நமது நாட்டில் வாடிக்கை தானே! அதுவும் நெல்லிக்காய் சீசனில், நம் வீட்டுப் பெண்மணிகள் இவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஊறுகாய், சட்னி, பச்சடி போன்றவற்றையும் வடகம் தயாரிப்பதும் வழக்கம் தானே !

நெல்லிக்காய் எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவக் குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும். கணைச்சூட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்காயைச் சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும். உடல் அசதி மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத்தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்குண்டு. இரத்த உறைவால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாகப் பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேசியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

உணவு செரிமானமின்மைக்கு எப்படிப் பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தித் தலையில் தேய்த்துக் குளிக்கவும் நெல்லிக்காய்த் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்த விதத் தொல்லையுமின்றி குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.

இயற்கை அளித்துள்ள அனைத்து உணவு வகைகளிலும் பிரதான இடம் கொண்டவை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனிவகைகளே. நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வளமாய் வாழ வைக்கின்றன. இயற்கை அளித்துள்ள இத்தகைய உணவு வகைகளையும், அவற்றின் பயன்களையும் முக்கியமாக அவற்றிலிருந்து நாம் பெறக்கூடிய மருத்துவப் பயன்களையும் எளிதாய்ப் புரிந்து அறிந்து வாழ்க்கை வாழ்வதற்கே என்ற குறிக்கோளை அடைவதற்கே. அதிலும் நமக்குத் தகுந்தவாறு எளிதாகக் கிடைக்கின்ற உணவுப் பொருட்களைப் பற்றியே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். பிறர் நலனில் அக்கறைகொண்டு, எனது இயற்கை மருத்துவ முறைகளால் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை அளித்தும் ஆலோசனைகள் வழங்கியும் சேவை புரிவதின் மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நன்றி : இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு மாத இதழ்

அக்டோபர் 2010

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்..

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்..
http://www.tamilvu.orgM



தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், கவிதை-உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் சுமார் 400 புத்தகங்களை வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகும்? புத்தக அலமாரி தாங்குமா? சொந்தமாக வாங்க முடியவில்லை என்றாலும் நூலகத்துக்கு சென்று படித்தால், இவ்வளவற்றையும் படிக்க எவ்வளவு காலம் ஆகும்?

கவலையே வேண்டாம். இத்தனையும் உங்களுக்கு இலவசம். உங்கள் புத்தக அலமாரியில் இவற்றுக்கு இடஒதுக்கீடும் வேண்டாம். நூலகத்துக்கு பாதம் தேய நடக்கவும் வேண்டாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் கணினியில் இணைய இணைப்பை சொடுக்கினால் போதும். அத்தனையும் உங்கள் மவுஸின் கட்டுப்பாட்டில்.

அதிசயமாக இருக்கிறதா? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகத்தை இணையத்தில் திறந்தோமானால் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்நூலகம் மொத்தம் பல்வேறு செயல்பாடுகளை கொண்டு தனித்துவத்தோடு இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில் தொடங்கி புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம் என்று அறுவகை இலக்கணம் வரை தமிழின் ஆதார இலக்கணநூல்கள் 20 தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள், நாலடியார் தொடங்கி அத்தனை பதிணென்கீழ்க்கணக்கு நூல்களும் நூலகத்தில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் தொடங்கி தமிழின் முக்கிய காப்பியங்கள் அனைத்தும் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவை மட்டுமன்றி சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், சித்தர்பாடல்கள் என்று திகட்ட திகட்ட தமிழமுதம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் ரோமன் வரிவடிவத்திலும் தனியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அகராதிகள் தளத்தில் உண்டு. தமிழ் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) பத்து தொகுதிகள் கிடைக்கிறது. பல்வேறு துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் புதிய கலைச்சொற்களை தொகுத்து கொடுக்கிறார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தொகுத்த சுவடிகளை, சுவடிக் காட்சியகமாக கண்முண்ணே விரிகிறது. சுவடிகளை இணையத்தில் விளக்கங்களோடு வாசிக்கலாம்.

இவை மட்டுமல்லாது, பண்பாட்டுக் காட்சியகம் ஒன்றும் சிறப்பாக இங்கே இயங்குகிறது. இதில் திருத்தலங்கள், திருவிழாக்கள், கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள் என்று தமிழருக்கான பாரம்பரியப் பெருமைகள் அனைத்துமே ஒலி-ஒளி காட்சிகளாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குறித்தோ அல்லது தமிழர் குறித்தோ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகம், போதும் போதுமென்று சொல்லக்கூடிய அளவுக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது.

ஒருமுறை இந்நூலகத்துக்குள் நுழைந்துவிட்டால் தமிழ் நம்மை ஈர்த்து இங்கேயே உட்கார வைத்துவிடும். இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை ஒருங்குறியில் (Unicode) மாற்றிவரும் பணிகள் நடந்துவருவதால், சில நூல்களை வாசிக்க எழுத்துரு தேவைப்படும். எனவே முதன்முதலாக நூலகத்துக்குள் நுழையும்போது, தேவைப்படும் எழுத்துருவை உங்கள் கணினியில் நிறுவிவிடுவது நல்லது.

இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் வருகைகளை பெற்றுள்ள இந்த நூலகத்துக்கு நீங்களும்தான் போய்ப் பாருங்களேன்.

இணைய முகவரி : http://www.tamilvu.org/library/libindex.htm



(நன்றி : புதிய தலைமுறை)

வியாழன், 8 ஜூலை, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக, என் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.